மகாராஷ்டிராவில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு – பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.!!!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் நேற்று (30) நள்ளிரவு 4 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் தீயணைப்புப் படையினர் இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான கட்டடம் ஏற்கனவே மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருந்ததுடன், உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகளால் ‘ஆபத்தான கட்டடம்’ என அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டடத்தின் மோசமான நிலை காரணமாக அதில் புனரமைப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையிலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடிபாடுகளை அகற்றுவதற்கும், சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கும் அதிநவீன உபகரணங்களுடன் NDRF மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் பொலிஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


