காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில்: பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 79 மாணவிகள் கௌரவிப்பு.!!!
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து இவ்வாண்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 79 மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10) பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யூ.எல். மன்சூர் தலைமையில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம். எஸ். சில்மியா கலந்து கொண்டு, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவிகளை கௌரவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
அவர் நிகழ்வில் உரையாற்றியபோது, மாணவிகள் தங்கள் பல்கலைக்கழகக் கல்வியில் சிறந்து விளங்கி உயர்ந்த கல்வித் துறைகளை அடைய வேண்டும் என வாழ்த்தினார். மேலும், தானும் இப்பாடசாலையின் பழைய மாணவியாவதை நினைவுகூர்ந்து, தாம் கல்வி கற்ற காலத்தில் பாடசாலையுடன் இணைந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம். பாயிஸ், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உதவிச் செயலாளர் நிவாஸ் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோரால் நினைவுப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதி மற்றும் பாடசாலை அதிபரால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நிகழ்வின் இணை அனுசரணையை கோல்ட் சிட்டி நிறுவனத்தின் உரிமையாளரும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு கௌரவ உறுப்பினருமான இர்ஷாத் ஹாஜியார் வழங்கியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.











































