பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!!!
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பிராந்தியத்தை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.37 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மிண்டனாவோ தீவிலுள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் தென்மேற்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் அமைந்திருந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாத்தியமான பின்னடைவு அதிர்வுகள் (Aftershocks) ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிலிப்பைன்ஸின் சில கடலோரப் பகுதிகளில் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரையிலான சுனாமி அலைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில கடலோரப் பகுதிகளிலும் 1 மீட்டர் (3 அடி) உயரம் வரையிலான அலைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலமை தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அவசரகால மீட்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.









