சீனாவை நோக்கி நகரும் ‘டால்பின்’ புயல்; 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு.!!!
வெள்ளம் மற்றும் காற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.
‘டால்பின்’ புயல் சீனாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை மாலை சீனாவின் வென்சுகு பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 180 முதல் 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் காற்றின் வேகம் மணிக்கு 250 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனக் கூறி வருகின்ற போதிலும், தற்போதைய நிலவரத்தில் அதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவில்லை.
எனினும், கரையைக் கடக்கும் நேரத்தில் புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும் சாத்தியத்தையும் முழுமையாக நிராகரிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து உருவாகும் ஈரப்பதமான காற்று, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஊடாகப் பயணித்து தாய்லாந்து வளைகுடா வழியாக டால்பின் புயலைச் சென்றடைவதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் தாக்கம் தமிழகத்தின் வானிலையிலும் உணரப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைந்து மேகமூட்டமான வானிலை நிலவுவதற்கு இந்தப் புயலின் காற்றுச் சுழற்சியும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டால்பின் புயல் சீனாவைக் கடக்கும் போது கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றினால் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

