ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல் பயணம் – ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு பின் அனுமதி.!!!
ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜப்பானிய கப்பல் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் அரசியல் தலைவர் டகாயிச்சி, இது “நேர்மறையான முன்னேற்றம்” என குறிப்பிட்டுள்ளார். எனினும், கப்பல் செல்ல அனுமதி வழங்குவதற்காக ஈரான் முன்வைத்த கோரிக்கைகள் என்ன என்பதைக் குறித்து அவர் விளக்கம் வழங்க மறுத்துள்ளார்.
அறிக்கைகளின்படி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் பயணிக்க சில புதிய நிபந்தனைகள் தற்போது அமலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுங்கக் கட்டணங்கள் யுவான் நாணயத்திலோ அல்லது கிரிப்டோ நாணயங்களிலோ செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஜப்பான் அரசாங்கம் ஈரான் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிபர் பெஷெஷ்கியன் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது, குறித்த ஜப்பானிய கப்பல் அதில் இருந்த மூன்று ஜப்பானிய மாலுமிகளின் பாதுகாப்புடன் ஜப்பான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கப்பல் செல்ல அனுமதி பெறுவதற்காக ஜப்பான் எந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அது யுவான் நாணயத்தில் கட்டணம் செலுத்தியதா, சுங்கக் கட்டணமா அல்லது அரசியல் தொடர்பான ஏதேனும் சலுகையா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், “சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான கடல் போக்குவரத்து மிகவும் முக்கியமானது” என ஜப்பான் தரப்பில் வலியுறுத்தப்பட்டாலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன.
இந்தச் சம்பவம் உலக அரசியல் மற்றும் கடல் வர்த்தகத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடியதாகக் கருதப்படுகின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்கால நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் அதிகரித்துள்ளது.