அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தத்திற்கு பின் நெதன்யாகுவின் அர்த்தமுள்ள மௌனம்.!!!
● கடுமையான விமர்சனத்தில் இஸ்ரேல் பிரதமர்; லிகுட் கட்சியும் பிரச்சாரத் திட்டத்தை மாற்றியது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி 12 மணி நேரத்திற்கும் மேலாகியும், ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியை உறுதியளித்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான இந்த மூலோபாய பின்னடைவுக்காக நெதன்யாகுவின் விமர்சகர்கள் கடந்த சில மணி நேரங்களாக அவரை கடுமையாக சாடி வரும் நிலையில், அவரது இந்த அமைதி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் ஈரான் தொடர்பான எந்த நடவடிக்கைக்கும் உடனடியாக பதிலளிக்கும் வழக்கம் கொண்ட நெதன்யாகுவின் தற்போதைய மௌனம், இரு தலைவர்களுக்கிடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, ட்ரம்ப்–நெதன்யாகு தனிப்பட்ட உறவை மையப்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த லிகுட் கட்சி, தற்போது அந்த திட்டத்தை கைவிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஈரானுக்கு எதிராக தொடர்ந்து ராணுவ நடவடிக்கையை வலியுறுத்தி வரும் நெதன்யாகுவின் அணுகுமுறையால் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தியடைந்து, அவரிடமிருந்து விலகியிருப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளதாக ‘கிளாஷ் ரிப்போர்ட்’ தளம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக லெபனான் தொடர்பான விடயங்களும் இடம்பெற்றுள்ளமை, நெதன்யாகுவின் தற்போதைய கடும் அதிருப்திக்கும், நீடித்த மௌனத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.