ஈரானின் எந்தப் பகுதிக்கும் எங்கள் விமானங்கள் சென்றடையும் – இஸ்ரேல் வலிமை குறித்து நெதன்யாகு எச்சரிக்கை.!!!
அமெரிக்காவுடன் புதிய விமான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, தற்போது இஸ்ரேல் முன்னெப்போதையும் விட அதிக வலிமையுடன் இருப்பதாகவும், நாட்டின் போர் விமானங்கள் ஈரானின் எந்தப் பகுதிக்கும் சென்றடையும் திறன் கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“இஸ்ரேல் எப்போதும் தனது எதிரிகளை விட வலிமையாக இருக்க வேண்டும். அதற்காக நவீன ரகமான F-35 மற்றும் F-15 போர் விமானங்களை நாம் பெற்றுள்ளோம்” என நெதன்யாகு குறிப்பிட்டார்.
இந்த புதிய விமானங்கள் இஸ்ரேலின் வான் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், ஈரானில் நடைபெற்ற முந்தைய நடவடிக்கைகளிலும் தற்போது நடைபெறும் நடவடிக்கைகளிலும் அந்த மேலாதிக்கம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் விமானிகள் தேவையான நேரத்தில் ஈரானிய வான்வெளியின் எந்தப் பகுதிக்கும் சென்றடையக்கூடிய திறன் கொண்டவர்கள் என்றும், அதற்காக முழுமையாக தயார் நிலையில் இருப்பதாகவும் நெதன்யாகு வலியுறுத்தினார்.
இந்த கருத்துக்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.