சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கப்பல் கடத்தல்: 17 ஊழியர்களில் இலங்கையரும் ஒருவர்.!!!
சோமாலிய கடற்கரைக்கு அப்பால் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை கடத்தியுள்ளதுடன், அதில் பணியாற்றிய 17 ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பலில் பணியாற்றியவர்களில் இலங்கையர் – 01, பாக்கிஸ்தானியர்கள் – 10, இந்தோனேசியர்கள் – 04, இந்தியர் – 01 மற்றும் மியான்மார் பிரஜை – 01 என மொத்தம் 17 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 18,500 எரிபொருள் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற இந்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலிய கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது குறித்த கப்பலும் அதில் இருந்த 17 ஊழியர்களும் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலிய கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்ட நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சோமாலிய அதிகாரிகளோ அல்லது அந்த கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படையினரோ இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் இதுவரை வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.