ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: அமெரிக்கா–ஈரான் குற்றச்சாட்டுகள் மத்தியில் எண்ணெய் விலை உயர்வு.!!!
மத்திய கிழக்கில் முக்கிய கடல் வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதுடன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் மேற்கொண்டு அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கிச் சென்ற ஈரானிய எண்ணெய் கப்பலும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே நீரிணைக்குள் நுழைந்த மற்றொரு கப்பலும் அமெரிக்காவின் இலக்காக இருந்ததாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டதாக கூறப்படும் தூண்டுதலற்ற தாக்குதல்களுக்கு பதிலடியாக, அவற்றுக்கு காரணமான ஈரானிய இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற மூன்று அமெரிக்கக் கடற்படை கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய சந்தைகளில் மசகு எண்ணெய் விலைகளும் வேகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.