ஈரான் தாக்குதல் நடத்தினால் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பதிலடியாக ஏவப்படும் – டிரம்ப் எச்சரிக்கை.!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈரான் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவின் தற்போதைய அதிபரான என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈரான் அரசு ஈடுபட்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி 1,000 ஏவுகணைகள் ஏற்கனவே குறிவைக்கப்பட்டு ஏவுவதற்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் ஒரு ஆண்டு காலம் அல்லது அதற்கு மேல் கூட நீடிக்கக்கூடிய வகையில், ஈரானின் பல்வேறு பகுதிகளை முழுமையாகத் தாக்கி செயலிழக்கச் செய்ய அமெரிக்க ராணுவம் தயாராகவும், அதற்கான முழுத் திறனுடனும் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்தக் கருத்து, அமெரிக்கா–ஈரான் உறவுகளில் நிலவும் பதற்றம் தொடரும் நிலையில் வெளியாகியுள்ளதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.