அமெரிக்கப் படைகள் அமீரகத்திற்கு இனி ‘சுமை’ – அரசியல் ஆய்வாளர் அப்துல்காலிக் அதிரடி கருத்து.!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூடுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என அந்நாட்டின் முன்னணி அரசியல் ஆய்வாளர் டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஈரான்–இஸ்ரேல் மோதலின் போது, அமீரக வான்பரப்புக்குள் நுழைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமான ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமீரகம் தனது சொந்த பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக தடுத்து அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைச் சுட்டிக்காட்டிய டாக்டர் அப்துல்லா, அமீரகம் தற்போது அந்நிய உதவியின்றி தன்னைத்தானே பாதுகாக்கும் திறனை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் குறித்து அவர் முன்வைத்த முக்கிய கருத்துகளில், முன்னர் பாதுகாப்பிற்கு அவசியமாக இருந்த அமெரிக்க ராணுவப் படைகள் தற்போது அமீரகத்திற்கு ஒரு ‘சுமை’ ஆக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், அவை காரணமாக அமீரகம் பிராந்திய மோதல்களில் தேவையற்ற வகையில் இழுக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிநவீன ஆயுதங்களை சொந்தமாகக் கொள்முதல் செய்து தேசிய ராணுவத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து, வளைகுடா பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் அமெரிக்க ராணுவ ஆதிக்கத்துக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது. இதேவேளை, பிராந்திய பாதுகாப்பு கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படக்கூடிய அறிகுறியாகவும் இந்த விவாதம் கருதப்படுகிறது.