ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை: ஆபத்தானதும் பொறுப்பற்றதும் – சீனா கடும் கண்டனம்.!!!
ஈரானிய துறைமுகங்களை நோக்கி அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை நடவடிக்கை ஆபத்தானதும் பொறுப்பற்றதுமானதாகும் என சீனாவின் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முதல் அமெரிக்கா இந்த முற்றுகை நடவடிக்கையை அமுல்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதுடன், மிகவும் பலவீனமான நிலையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் பாதிக்கக்கூடும் என சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.
இது மிகவும் ஆபத்தானதும் பொறுப்பற்றதுமான செயற்பாடாகும் என்றும், இத்தகைய நடவடிக்கைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
ஈரானிடமிருந்து பெருமளவில் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள சீனா, இம்மோதல் விரைவில் முடிவுக்கு வருவதையும், சர்வதேச எண்ணெய் சந்தையில் மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதையும் எதிர்பார்க்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.